Wednesday 9 March 2011






மெல்லினமே! நீ 

புன்னகைக்கும் போது
புன்னை மரப்பூக்கள் 
சிந்தும் மகரந்தம்- நினைவில்!

கண்களால் எனைக் 
கைது செய்யும்போது 
மழைச் சாரல்கள்- நினைவில்!

அருகில் அமர்ந்து 
பேசும்போது 
குளிர் தென்றல்- நினைவில்!

என் தோள் சாய்ந்து 
நடக்கும்போது 
இனிய கவிதைகள்- நினைவில்!

உன் வெட்கத்தினை 
ரசிக்கும்போது 
சுகமான தீண்டல்கள்- நினைவில்!

எனக்காய்க் காத்திருக்கையில் 
உணர்வுகள் உயிர்த்தெழும்
கடலலைகள்- நினைவில்!

நீ உயிர்வாழ்வது
எனக்கென்று சொல்கையில்
ஆர்ப்பரிக்கும் காதல்- நினைவில்!

எந்தன் கவிதைகளை 
மனனம் செய்கையில்
இதமான அரவணைப்புகள்- நினைவில்!

உன் மடி மீது- என்
தலை சாய்க்கையில்
அற்புதமான தாயன்பு- நினைவில்!

தலை முடிகளுக்கிடையில் 
விரல் தொடுத்துக் கோதுகையில்
உண்மையான நட்பு- நினைவில்!

எனக்குப் பிடிப்பதெல்லாம்
உன்னால் நேசிக்கப்படுகையில்
கவின் மிகு காட்சிகள்- நினைவில்!

என்னில் பொய்க் கோபம்
காட்டும்போது
ஈர விறகுகள்- நினைவில்!

உணர்வு பூர்வமாய்
நீ அழுகையில்
எதிர்பாரா நிகழ்வுகள்- நினைவில்!

உன் வருகையைச் சொல்லும்
ரோசாப்பூ நறுமணம் வீசுகையில்
மெல்லிய ஸ்பரிசங்கள்- நினைவில்!

எனை யாருக்கும் விட்டுத்தர
நீ மறுத்திடும்போது
கண்ணீர்த்துளிகள்- நினைவில்!

No comments:

Post a Comment