Wednesday 9 March 2011

தனிமை!



எனக்காய்

பற்பல முகங்களில்
சொற்சில நவில நட்பு வட்டம்!

எனக்கான...

அற்புத நண்பன்
தனிமை மட்டுமே!

தனிமையின் தன்மைகள்
ஆர்ப்பரிப்பும்...அமைதியும் கலந்தவை!

மோனங்களின் மறைவுகள்
இங்கேதான் புலப்படும்.
கானங்களின் நிறைவுகள்
அங்கேதான் பலப்படும்!

நம்மை நமக்கே
அடையாளம் காட்டுகின்ற கண்ணாடி
உண்மைகளை நாட்டுவதில் முன்னோடி!

ஞானம் புதைந்த நொடிகள்...
வானம் அளக்கும் அடிகள்!

எனை நோக்கி நீண்டு வரும்
தென்றல் கூட ஆயிரம் கவி மொழியும்!

ஆனந்தங்களின் தாண்டவம்
தனிமையோடும் வியாபிக்கும்!

அற்பமான காலங்கள்..
சிற்பமான கோலங்கள்!

தனிமை தரும் பாடங்களில்
வாழ்க்கையின் வேடங்கள்!

கடந்த கால ஞாபகமாய்
முடிந்து போன ஆதங்கமாய்
முற்றுப் பெறா நட்புகளுக்கு
தனிமையொரு தொடர் கதை!

கனவுகளில் நிறைந்து
நினைவுகளில் உறைந்து
தவிக்கின்ற காதல்களுக்கு
தனிமையொரு தொடர் கதை!

நிம்மதிகளைத் தொலைத்து
சந்ததிகளை நினைத்து
ஏங்குகின்ற மனங்களுக்கு
தனிமையொரு தனிச்சிறை!

தோல்வி தழும்பிய மனிதருக்கு
தனிமையின் கூரிய சிந்தனை- ஒரு
வழி தேடல்!

முன்னோக்கி எழுந்தால் வெற்றி!
பின்னோக்கி விழுந்தால் மரணம்!

பள்ளத்தில் வீழ்ந்த
உள்ளத்தின் உணர்வலைகளுக்கு
தனிமை என்பது அழுகை!

புகழ்ச்சிகளில் உருகி.. உருகி...
நெகிழ்ச்சிகளில் மருகி.. மருகி...
மகிழ்கின்ற ஆத்மாக்களுக்கு
தனிமை என்பது பூபாளம்!

ஆடம்பர அலங்காரம் துறந்து
ஆணவ அகங்காரம் மறந்து
ஆன்மீகம் இழைந்தோடும் ஜீவன்களுக்கு
தனிமை என்பது சாந்தி!

தனிமையொரு கலை
வாங்க இயலா விலை!

நுட்பங்கள் எல்லோருக்கும் தெரியாது
ரகசியங்கள் எல்லோருக்கும் புரியாது!

கவிஞனுக்கு
தனிமையென்பது...

ஒரு குழந்தை!

கொஞ்சுவதும்..
கெஞ்சுவதும்...
அதீதமாய்! 

No comments:

Post a Comment